Monday, 18 September 2017

எது வணக்கம் ?

எது வணக்கம்.?

அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும்
தொழுகை,
நோன்பு,
ஜகாத்
போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பம் தோன்றும்.

கூடவே இவற்றை மட்டும் செய்வதற்காகவா நம்மை ஆண்டவன் படைத்தான்?
என்ற சந்தேகமும் எழும்.

உண்மையில் 24 மணி நேரத்தில் 5% மட்டுமே தொழுகைக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்..?

வருடத்தின் மாதங்களைக் கணக்கிட்டால் 8.5% மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்...?

ஜகாத் என்பதோ வருடத்தில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?

ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?

எனவே வணக்கம் என்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல...

மாறாக....

ஓர் ஏழைக்கு உணவளிக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

மத வேறுபாடு பார்க்காமல் மனிதனின் கண்ணீர் துடைக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

அமானிதம் பேணி அடுத்தவர் உரிமையில் கை வைக்காமல் இருக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

உன் நாவால் பிறரை மன வேதனைக்கு உள்ளாக்காமல் இருக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

மலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

லஞ்சம் வாங்க மறுக்கும் லட்சியவாதியாக மாறும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

உண்மையை உரக்கச் சொல்லும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

வியாபாரத்தில், கொடுக்கல் வாங்கலின்போது விட்டுக்கொடுக்கும்  மனோபாவத்துடன் நடந்துகொள்ளும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

உனது வேலையில் பொறுப்புடன் நடந்துகொள்ளும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர..
வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல!

இந்த வணக்கங்கள்தான் மற்றவர்களை இஸ்லாத்தின்பால் கவந்திழுக்குமே தவிர,

வெறும் பரப்புரைகளும்..
பயான்களும் அல்ல!

"நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி,
வேறு எதற்கும் படைக்கவில்லை”

-அல்குர்ஆன் 51:56

அஷ்ஷெய்ஹூல்காமில்மௌலவிஜூபைர்அஹமதுஷூஹூதிஷாஹ்ஃபைஜிபாகவி

‎‏‪வல்லோன் மறை போற்றும் வலிமார்கள்‬ ‎أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ‪10:62‬ நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 10:62) ‎‫الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ ‬அவர்கள் இறைவனை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு அவனுக்குப் பயந்தும் நடந்து கொள்கின்றனர்.(10:63) 1 . அவ்லியாக்கள் என்றால் யார்? ‎الولي : هو كل مؤمنٍ تقيٍّ ؛ இறை அச்சமுள்ள எல்லா முஃமின்களும் அவ்லியாக்களே‫!‬ ‎لقوله تعالى : الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ‪10:63 ‬ ## و لقوله تعالى : ۚ إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அவ்லியாக்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும் பாலானவர்கள் இதனைப் புரியாமல் இருக்கிறார்கள் . 8:34 எனவே எல்லா நபிமார்களும் அவ்லியாக்களே ! எல்லா ஸஹாபாக்களும் அவ்லியாக்களே ! நான்கு இமாம்களும் அவ்லியாக்களே ! ‪2.அவர்களின் அடையாளங்கள்‬ ‎وفي تفسير ابن كثير : حديث مرفوع كما قال البزار عن سعيد بن جبير، عن ابن عباس قال: ‎قال رجل: يا رسول الله، مَنْ أولياء الله؟ قال: "الذين إذا رءُوا ذُكر الله". ‎ثم قال البزار: وقد روي عن سعيد مرسلا. யாரைப்பார்த்தால் இறைவனின் ஞாபகம் வருமோ அவர்கள் தான் இறை நேசச் செல்வர்கள்‫.‬ ‎حديث إبن ماجه‪ ‬4109 والإمام أحمد ‪27601‬ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ‪ ‬أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ خِيَارُكُمْ الَّذِينَ إِذَا رُءُوا ذُكِرَ اللَّهُ عَزَّ وَجَلَّ உங்களில் உன்னதமானவர்கள் யார் என சொல்லட்டுமா என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கேட்டார்கள் .ஆம் சொல்லுங்களேன் என சஹாபாக்கள் சொன்னார்கள் . உங்களில் உன்னதமானவர் யாரெனில் யாரைப் பார்த்தால் மட்டுமே அல்லாஹ் (ஆகிரத்) நினைவு வருமோ அவர் தான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னார்கள் என்பதாக அஸ்மா ரலியல்லாஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் .ஹதீஸ் அஹ்மத் இப்னு மாஜஹ் 4109 3 . இறை நேசர்களின் அந்தஸ்து.......... ‎[رواه البخاري‪] 6021 ‬عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‪ ‬قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ ஸஹீஹ் புகாரி:6502 யார் என் நேசரை பகைத்துக் கொண்டாரோ அவருடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் நஃபிலான வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டே இருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு அவனை நான் நேசித்து விடும் போது , அவன் கேட்கின்ற செவியாக ,அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்கு பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளரின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப்போன்று நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவரோ மரணத்தை வெறுக்கிறார்.நானும் மரணத்தின் மூலம் அவருக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்‫.‬ ‪1) ‬هذا الحديث أصل في باب ولاية الله تعالى وهو أعظم وأصح حديث خاص بأولياء الله تعالى‪ .‬ ‪2) ‬هذا حديث قدسي كبير الشأن :لما اشتمل عليه من أمور عظام توصل إلى درجة الوِلاية الحقة‪ .‬ யார் என்னுடைய நேசர்களைப் பகைத்துக் கொள்கிறார்களோ அவர்களோடு போர் செய்வதாக ரப்புல் ஆலமீன் எச்சரிக்கிறான்‫.‬ நஃபிலான வணக்கங்களால் ஒரு மனிதன் எவ்வாறான நன்மைகளைப் பெற முடியும். என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. 4 . அவர்களின் அமல்கள் உன்னதமானது எந்த அமலையும் அது சிறியதுதானே என எண்ணிக் கை விடமாட்டார்கள். எந்த‫ ‬தீயதையும் அது மக்ரூஹ்தானே என எண்ணி செய்ய மாட்டார்கள். ‎صحيح مسلم ‪ 1707 ‬عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‪ ‬قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مِنْكُمْ الْيَوْمَ صَائِمًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ تَبِعَ مِنْكُمْ الْيَوْمَ جَنَازَةً قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ أَطْعَمَ مِنْكُمْ الْيَوْمَ مِسْكِينًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ عَادَ مِنْكُمْ الْيَوْمَ مَرِيضًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ ஸஹீஹ் முஸ்லிம் 1865. அபூஹுரைரா ரலியல்லாஹு அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களிடம் ”இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்கர் ரலியல்லாஹு அவர்கள் ”நான்” என்றார்கள். ”இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்கர் ரலியல்லாஹு அவர்கள் ”நான்” என்றார்கள். ”இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் ரலியல்லாஹு அவர்கள் ”நான்” என்றார்கள். ”இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் ரலியல்லாஹு அவர்கள் ”நான்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் " எந்த மனிதர் நல்லறங்களான இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.

Sunday, 17 September 2017

குத்புமார்கள்

🌸🌸குத்பின் பெருமை🌸🌸
வலி என்னும்பதம் வலா என்ற மூலத்திலிருந்து பிறந்தமையால் அச்செல்லக்கு சமீபம் சாட்சியம் என்று பொருள்படும் மனிதன் எனது இரகசியம் நான் அவனது இரகசியம் என்றுஅல்லாஹ்ஹதீதுகுதுஸியில் கூறுகிறான்.
உலகில் ஏக காலத்தில் பல எண்ணிக்கையுள்ள,
பலவகை படித்தரங்கள் உடைய
அவுலியாக்கள் - குதுபுமார்கள் - அப்தால்கள் - அவுத்தாதுகள் - நுகபாக்கள்
நுஜபாக்கள்
என்ற பதவி உடையவர்கள்,

உலக முடிவு நாள்வரையில் இருந்தே வருவார்கள் என்றும்,
ஹகீகத்தில் ஈருலகையும் கண்காணிப்பவர்கள் அவர்கள் தானென்றும்,
அவர்களை முன்னிட்டே பலாய், முஸீபத்துகள் விலக்கப்படுவதாயும் ஹதீதுகள் பல காணப்படுகின்றன..

அன்னார் அனைவருக்கும் குத்பே அதிபராவார். அன்னாரை கௌது என்றும் சொல்லப்படும்.

இது பற்றிய ஆதாரங்கள் பல இருப்பினும் சிலவற்றை மட்டிலும் இங்குக் குறிப்பிடுவது போதுமெனக் கருதுகின்றோம்.

"ஆண்டவா! என் மீது நபிமார்கள் நடந்து திரிந்தார்கள், அவர்களுக்குப் பிறகு நபிகள் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சுமந்திருந்தேன். தற்போது அவர்களும் சென்று விட்டார்களே, நான் தனித்துவிட்டேனே, என் மீது எந்த நபியும் இல்லையே" என்பதாய் பூமி பிரலாபித்து இறைவனிடம் முறையிட்டுக் கொண்டது.
நான் சில அவுலியாக்களை அனுப்புவேன். அவர்களது இருதயங்கள் நபிமார்களது இருதயங்களைப் போலிருக்கும்.
அவர்கள் யுகமுடிவு வரை உன் மீது சஞ்சரிப்பார்கள் என்று ஆண்டவன் பூமிக்கு அறிவித்தான் என்ற இவ்விஷயத்தை ஸாலிஹான, இறையருள் நேசரான, பெரியார் ஒருவர் தமது உலக யாத்திரையின் போது, நித்திய ஜீவனுடைய ஹஜ்ரத் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்த சமயம் அன்னாரைக் கேட்டுத் தெரிந்து கொண்டதாக, ஷமவாஹிபுல் மஜீது பீ மனாகிபி ஷாஹில்ஹமீது எனும் கிரந்தத்தில் காணப்படுகிறது.

அந்த அவுலியாக்கள் ஏகத்தில் 440 பேர்கள். அவர்களுள்
நுஜபாக்கள் 300,
நுகபாக்கள் 70,
அப்தால்கள் 40,
அகியார்கள் 10,
உறபாக்கள் 7,
அன்வார்கள் 5,
அவுத்தாதுகள் 4,
முக்த்தார்கள் 3,
குதுபு ஒருவர்.

குத்பே அனைவருக்கும் அதிபராவார். இன்னாரை கௌது என்றும் சொல்லப்படும். இவர்களுள் யாரும் மரணமாவார்களாயின் அவர்களுக்கடுத்த (தரஜா) படித்தரத்திலிருப்பவர்கள் அந்த ஸ்தானத்திற்கு மாற்றப்படுவார்கள். அங்ஙணம் பதவியில் உயர்த்தப்படும் போது, கீழ்ப்படித்தரத்திலுள்ள நுஜபாக்கள் காலியாகுமிடத்தில் ஸாலிஹீன்களான முஸ்லீம்களில் ஒருவர் அந்தத் தானத்தில் அமர்த்தப் படுவார் என்று கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக , மனாகிபுகுத்பில் மஜீதிஸ்ஸையிது ஷாஹுல் ஹமீதில் மாணிக்கப்பூரியில் ,  மவுலிதிந் நாகூரிய்யில் மர்கதி என்ற கித்தாபில் ,  மாதிஹுர் ரஸுல் அல்லாமதுஷ் ஷைகு ஸதக்கத்துல்லாஹில் காஹிரிய்யிஸ் ஸித்தீக்கி (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்களது சீடர் , அல்லாமா ஆரிபுபில்லாஹ் மஹ்மூது தீபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும், மவாஹிபுல் மஜீது பீ மனாகிபி ஷாஹில்ஹமீது எனும் கித்தாபில், காயல்பட்டணத்தில் பிறந்து கீழக்கரையில் அடங்கி இருக்கும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்ற அல்லாமத்துல் பாளில் ஸையிது முஹம்மது ஆரிபுபில்லாஹி (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்களும் கூறுகின்றார்கள்.

இவை போன்ற பல அபூர்வ விளக்கங்களை மஜ்மூ அத்துர் ரஸாயில் 2-வது பாகம் 264-வது பக்கத்தில் ஷறத்துல் முஹ்த்தார் இயற்றிய அல்லாமா இபுனு ஆபீதீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் விபரமாக வரைந்துள்ளார்கள்.

மேலும் இமாம் ஷஃரானி (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்கள் அல்யவாக்கீத்து வல் ஜவாஹிர் என்னும் கிரந்தத்தில் குத்புமார்களின் தரஜா, பதவிகளை விவரமாக எழுதியுள்ளார்கள்.

இன்னும், இமாம் இபுனு ஹஜர் மக்கீ (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்கள் தங்கள் பதாவா ஹதீதிய்யாவிலும் விரிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும், என்னுடைய உம்மத்துகளில் நாற்பது நபர்கள் நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இருதயத்தையுடையவர்களாய் என்றும் இருந்தே வருவர். அல்லாஹ்தஆலா அந்த நபர்களைக் கொண்டு பூலோகத்தில் வாழுபவர்களை விட்டும் பிணிகளைப் போக்குவிப்பான். அவர்களுக்காக மழையைப் பொழியச் செய்வான். அன்னவர்களைக் கொண்டுதான் பூலோகத்திலுள்ளவர்களுக்கு உதவி புரியப்படும் என்பதாய் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஹதீது தபறானீயில் காணக் கிடைக்கின்றது.

குத்புக்கே #கௌது என்று பெயர்.
அவர் ஒருவருக்குப் பின் ஒருவராக வருவார். படைப்புகளை எல்லாக் கருமங்களிலும் அன்னார் இரட்சிக்கக் கூடியவராக இருப்பதனால் கௌது என்று பெயர். அன்னவருக்கு வலம், இடம் இருபக்கங்களிலும் அரசர்களுக்கு இருப்பதுபோல இரு அமைச்சர்கள் உள்ளனர்.
கௌது உடைய உத்தரவு கொண்டு "வலது பக்கமிருப்பவர் மறைவுலகங்களான #ஆலமுல்கைபு, ஆலமுல் #மலகூத்தை நிருவகித்து வருகின்றார்.
#இடது பக்கமிருப்பவர், வெளியுலகமான #ஆலமுஷ்ஷஹாதத்தைக் கண்காணித்து வருகின்றார் என்ற விபரத்தை வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்து அரபிக் கலாசாலை மத்ரஸா ஸ்தாபகர், ஹஜ்ரத், அல்லாமா, ஷைகு அப்துல் வஹ்ஹாபு ஸாஹிபு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது ஞான குரு ஹஜ்ரத் ஆரிபு பில்லாஹி, அல்லாமா ஷைகு ஷாஹ் முஹியித்தீன் ஸாஹிபு வேலூரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஜவாஹிருஸ்ஸுலூக்கு எனும் கிரந்தத்தில் 114-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.

மேலும் இது போன்ற விபரங்கள் ரூஹுல்பயான் தப்ஸீர் பாகம் 2, பக்கம் 363லும், இபுனு அரபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு விபரமாகச் சொல்வதை அறிவிக்கப்படுகிறது.

அந்தரங்க, பகிரங்க ஆபத்துக்களில் நின்றும் குத்புமார்களைக் கொண்டே ஆண்டவன் அகிலத்தைப் பாதுகாத்துக் கொள்கிறான் என்று தப்ஸீர் ரூஹுல்பயான் 9-வது பாகம், 102-வது பக்கத்திலும் கூறப்பட்டுள்ளது.மேலும் விபரமாகத் தெரிய முஜ்த்தஹிது, ஹாபிளு அஹா தீதெ நபவிய்யா, இமாம் ஷைகு ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இயற்றிய ரிஸாலா-அல்-கபருத்தால்லு அலாவுஜுதின் னுகபா-வல்-அக்த்தாபி-வல்-அவ்த்தாதி-வல்-அப்தால் என்ற நூலையும் அல்லாமா பகீஹ் இபுனு ஆபிதீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இயற்றிய மஜ்முஅதுர் ரஸாயில் நூலையும் நோட்டமிடுக.

அவுலியாக்களுள் இரு வகுப்பாருண்டு, ஒரு வகுப்பார் ஆண்டவனுடைய பாதையில் கஷ்டப்பட்டுத் தெண்டித்து அவனளவில் தன்னையழித்து பனாவாகியவர்கள். இவர்களுக்கு #கஸ்பீ என்று சொல்லப்படும். மற்ற வகுப்பார் ஆலம் அர்வாஹ் எனும் ஆன்ம லோகத்திலேயே ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு அத்தாயீ என்று கூறப்படும். குத்பு கௌதுகள் #அத்தாயீ வகுப்பைச் சேர்ந்தவர்களே. (ஜவாஹிருஸ்ஸுலுக்கு 114-வது பக்கம் பார்க்க)

குத்பு என்ற பதத்திற்கு முளை துருவம் என்றும், கௌது என்ற பதத்திறகு இரட்சிப்பவர் - நாயன் நோட்டமிடும் ஸ்தானம் என்றும் பொருளைப் பயக்கி நிற்பினும், அவற்றின் அந்தரங்கம் பல அரும்பெரும் இரசகியப் புதையல்களைத் தன்னுள் அடக்கியதாய் அமைந்து கிடக்கின்றன. இன்னவர்கள் மூலமாகத் தான் முதலவன் தன்னிருக்கையை அறிக்கை செய்ய வேண்டியதிருக்கிறது அன்றேல், அஞ்ஞான இருள்படர்ந்து மூடி, அகிலம் அந்தகாரத்துள்ளாழ்ந்து பாழ்பட்டுப் போடும்.

இறைவன் தன்னடியார்களுக்கு அளித்துள்ள கைம்மாறிளக்க வொண்ணாப் பெரும் அருட்கொடைகள் அத்தனையையும் ஒரு தட்டிலும், குத்பை அனுப்பித் தந்த அருட்பெருங்கொடையை மற்றொரு தட்டிலும் வைத்து சீர்தூக்கிப் பார்ப்போமாயின், குத்பால் பெற்ற கிருபையளவே கனத்து முறுகி நிற்கக் காண்போம்.

இன்னாரைப் பற்றி இறைவன் குர்ஆன் ஷரீபில்,
நிச்சயமாக அல்லாஹ் உடைய அவுலியாக்களுக்கு பயமென்பதுமில்லை கவலையென்பதுமில்லை (10:62) என்பதாய் அருளியுள்ளான்.

சுலைமான் (அலைஹி )

ஹஜ்ரத் சுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் பைத்துல் முகத்தஸ்சை ஜின்களை வைத்து கட்டிக்கொண்டிருக்கும்போதே இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்கள் .
தன் கையிலே அசா (ஊன்றுகோல் )இருக்கிறது அதை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் அந்நிலையிலே அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிகிறார்கள் .
ஜின்கள் சுலைமான் நபி உயிரோடு இருக்கிறார்கள் என்ற எண்ணத்திலே வேலை செய்கிறார்கள் .
ஊன்று கோலை கொஞ்சம் கொஞ்சமாக கரையான் அரிக்கிறது அதன் அடிப்பாகத்தை ஓட்டு மொத்தமாக அரித்த உடன் சுலைமான் நபியவர்களின் புனித உடல் பூமியில் சாய்கிறது.

அப்போதுதான் ஜின்களுக்கு சுலைமான் நபியவர்கள் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்ற உண்மை தெரிய வருகிறது சுலைமான் நபி ஒரே இடத்தில் பல வருடங்களாக எப்படி நிற்க முடியும்? ஜின்களுக்கு சந்தேகம் வரவில்லையா என்ற கேள்வி நமக்கு வரும் .
(நாம் கேள்வி கேட்க பிறந்தவர்கள்தானே )

அதற்க்கு முஃபஸ்சிரீன்கள் (குர் ஆணுக்கு விளக்கம் கொடுப்பவர்கள் ) கூறுகிறார்கள் நபி சுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இதற்க்கு முன்பே ஒரு பழக்கம் இருந்தது அதாவது அவர்கள் இறை தியானத்தில் பல வருடங்கள் நின்ற நிலையிலே கழிப்பார்கள் எனவே ஜின்கள் இப்போதும் அவர்கள் இறை தியானத்திலே இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டது .

நாம் இறந்து விட்டால் பூமிக்கு உள்ளே சென்றாலும் வெளியே நம் உடல் இருந்தாலும் சில நாட்கள் கடந்து விட்டாலே நாறிவிடும் (அல்லாஹ் நாடிய நல்லடியார்களின் உடல்களை தவிர ) ஊன்று கோலை அறித்த கரையான் அல்லது இறந்து விட்ட மனித உடலை சுற்றி வட்டமிடும் மற்ற பூச்சிகள் நபி சுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களின் உடல் பக்கம் செல்லவில்லை
நபிமார்களின் உடலை மண் தீண்டாது என்பதை அல்லாஹ் இதன் மூலம் விளக்கி காட்டுகிறான் .

அஷ்ஷெய்ஹூல்காமில்மௌலவிஜூபைர்அஹமதுஷூஹூதிஷாஹ்ஃபைஜிபாகவி

Saturday, 16 September 2017

ரிபாயி (ரலி)

நமது உயிரினும்  மேலான பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்  காலத்தில் சிவப்புக் கொடி பல  தடவைகள் உயர்த்தபட்டிருக்கிறது...!

ஆனால் பிறையுடனும் ஐகோண நட்சத்திரத்திடனும் கூடிய சிவப்புக் கொடியை முறைப்படுத்தி,,,

உரிய நிய்யத்துடன் உயர்த்தியவர்கள், ஹஜ்ரத்  ஸூல்தானுல் ஆரிபீன் ஸையிது அஹ்மது கபீர் ரிபாயி ரஹிமஹூல்லாஹூ  அவர்கள்தாம்....!!

இந்த கொடியே பின்னர் இஸ்லாமிய உலகின் கொடியாக  முஸ்லிம் உலகக் கலிஃபாவின் கொடியாக ஆயிற்று...!

பிற்காலத்தில் முஸ்லிம் உலகின் கொடியாக இந்தச் சிவப்புக் கொடி உலகின் முஸ்லிம்கள் வாழ்ந்த சகல ஊர் களிலும் உயர்த்தப்பட்டது.!

இந்த கொடியில் சிவப்பு நிறத்தையும் -பிறை-நட்சத்திரத்தையும் உண்டாக்கிய ஆண்டகை அவர்கள் அதன் மூலமும் மகத்தான அகமியங்களை வெளிப்படுத்தினார்கள்..!!

கொடியிலுள்ள ஐகோண நட்சத்திரம்  முஸ்லிம் சமுதயாயத்தைக் குறிப்பதாகவும் ,,

பிறை நபி பெருமான்  ஸல்லல்லாஹூ அலைஹி  வஸல்லம்  அவர்களை குறிப்பதாகவும்...,,

கொடியின் சிவப்பு நிறம் அல்லாஹ்வின் தீவிர சக்தியான "ஜலாலை"க் குறிப்பதாகவும்,,

நிய்யத்து வைத்து ஆண்டகை அவர்கள் இந்தக் கொடியை உயர்த்தினார்கள்...!

ஐந்து கடமை களைக் கொண்ட இஸ்லாத்தின் அனுஷ்டானத்தில்லுள்ளவர்கள் முஸ்லிம்கள்,,,

அவர்கள் மனிதனின் ஐந்து படித்தரங்களில் நம்பிகை கொண்டவர்கள்..!

எனவே ஐந்து முனை களைக் கொண்ட நட்சத்திரம்மாக முஸ்லிம் சமுதாயத்தை அவர்கள் உருவகப் படுத்தினார்கள்..!

இந்த உலகம் ஒருவகை இரவாகும் ,,,

மஹ்ஷர் என்ற சூரியயோதயம்....,,

வரும்போதுதான் நாம் பகலைப் பார்க்க முடியும்..!

ஆனால் இரவில் சந்திரன் இருக்கிறது.!

சந்திரனின் அந்த வெளிச்சம் சூரியனிடமிருந்து வாங்கப்பட்ட வெளிச்சம் தான்,,

எனவே நாம் இரவில் இருந்தாலும் ஒரு வகையில் சந்திரன் மூலம் சூரியனுடைய வெளிச்சத்தை பார்க்கிறோம்...!!

இது போன்றே இந்த உலகம் என்ற இரவில் இருக்கும் நாம் ,,,

அல்லாஹ்வைக் காண முடியவில்லை:

மஹ்ஷரில் காண்போம்,,,

ஆயினும் சூரியனுடைய வெளிச்சத்தைச் சந்திரன் மூலம் பார்ப்பது போல்,,,

அல்லாஹ்வின் சுடர்,, முழுமதி முஹம்மது ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பட்டதை மட்டும் பார்க்கக்கூடியவர்களாய் இருக்கிறோம்..!!

அந்த சுடரின் வெளிச்சத்தைப் பெறும் உரிமை சத்திய முஸ்லிம்கள் யாவருக்கும் உரியதாகும்.!

அந்தச் சுடர்தான் °°°நூரே-முஹம்மதிய்யா என்பது...!

எனவே கண்மணி நபிகள் பெருமானாரைக் குறிப்பதாகப் பிறையை ஆண்டகை அவர்கள் கொடியில் அமைதார்கள்..!

இரவில் சூரியக் கிரணங்கள் நேரடியாக வராது சந்திரன் மூலம்மாக வருவதுப்போல,,,

அல்லாஹ்வின் சுடர்கள் சிருஷ்டிகள் மீது விழுவது..7..ஏழு வகைப்பட்டதாகும்.!

இந்த 7ஏழு வகையில் விழும் சுடரில் ஒவ்வொரு வகைக்கும் ஒரு நிற அடையாளம் உண்டு...!

இறங்கும் சுடரின் தன்மைக்கு ஏற்ற காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற நிறங்களை நாதாக்கள் உபயோகித்துள்ளனர்..!

எனவே ஸூல்தானுல் ஆரிபீன் ஆண்டகை அவர்களும் அந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்ற,,

சுடர் இறங்கவேண்டும் மாதலால் அதற்கேற்ற நிறத்தைக் கொடியில் அமைதார்கள்..!

ஆண்டகை அவர்களின் காலத்தில் சைத்தானிய சக்திகள் தலைதூக்கி நின்றன..!

அவற்றை எதிர்த்துப் போராடிச் சன் மார்க்கத்தை வளர்க்கத் தீவிரமான சக்தி தேவையாய் இருந்த்து ..!

எனவே சாத்வீக மகாத்மாவாவான ஆண்டகை அவர்கள் அல்லாஹ்வின் தீவிர சக்தியான "ஜலால்" அதிகமும் வளரவேண்டும்,,என்று,

"ஜலாலு"க்கு உள்ள நிற அடையாளமான சிவப்பைக் கொடியில் சேர்தார்கள்..!

நபி பெருமான்  ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்களின் வழியாக முஸ்லிம் சமுதாயமானது  நட்சத்திரத்தில் பட்டு,,

"ஜலால்"

ஒளி வீசவேண்டும் என்பது அவர்களின் நிர்ணயமாக -நிய்யத்தாக இருந்த்து ..!

(மாபெரும் மகாத்மா ரிபாயி ஆண்டகை என்ற புத்தகத்தின் பதிவு )(மீள் பதிவு)

சர்க்காரின் கருனை

*மரணம் ;*
வா  மனிதா . .
நீ  கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது.."

*மனிதன் ;*
"இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது?" 

*மரணம் ;*
"மன்னித்துவிடு மனிதா . .
உன்னைக் கொண்டு
செல்வதற்கான நேரம் இது.."

*மனிதன் ;*
நான் 
இரவு , பகலாக  உழைத்து  சேர்த்த   எனது  பொருளாதாரம் . .

*மரணம் ;*
"நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு ..

*மனிதன் ;*
"என்னுடைய திறமைகள். .

*மரணம் ;*
"அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்மந்தப்பட்டது..

*மனிதன் ;*
"அப்படி என்றால்
என் மனைவி,மக்கள்  மற்றும்   உற்றார்  உறவினர் . .

*மரணம் ;*
அவர்கள்   உன்   இதயத்துடன்  சம்பந்தப்பட்டவர்கள் . .

*மனிதன் ;*
எனது  உடல்?

*மரணம் ;*
"அது இந்த  மண்ணுக்கு
  சொந்தமானது

*மனிதன் ;*
கண்களில்   நீர் வழிய
"என்னுடையது என்று
எதுவும் இல்லையா?"

*மரணம்* ;
நீ வாழ்ந்த 
ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது..
நீ  செய்த  தர்மம் , பிறருக்கு  நன்மை 
செய்தது  , பிறர்  துண்பத்தில்   பங்கு 
கொண்டது  ,பிறருக்கு  தீங்கு  செய்யாமல்  இருந்தது ,   போன்ற 
போன்ற  நல்ல  செயல்கள் ,
மற்றும்  நீ  செய்த  பாவ  கருமங்கள்..
இவை  மட்டுமே  உன்னுடையது . .

மற்ற   எதையும்   இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது..
முரீதாகிய நாம் கடைசியில் கொண்டுசெல்வது நம் செய்த அமல் இல்லை நம் சர்காரின் கருனை மட்டுமே

அஷ்ஷெய்ஹூல்காமில்மௌலவிஜூபைர்அஹமதுஷூஹூதிஷாஹ்ஃபைஜிபாகவி

وانك لتهدي الى صراط مستقيم
இன்னும் திடனாக நீர் நேர்வழி காட்டுகிறீர்.
செய்ஹு அவர்கள் பள்ளிவாசலில் தொழூகையை முடித்து வெளியே வந்த சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பார்த்த செய்ஹுதன் முரீதுகளிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்கள்?
ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?

முரீதுகள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.....
பின்னர்..
முரீதுகளில் ஒருவர்:= கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்!
அதனால் சத்தமிடுகிறோம்!

செய்ஹுனா ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்?
அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்!
நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துரைக்கலாமே!

ஒவ்வொரு முரீதும் ஒரு காரணம் சொல்கிறார்...... ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!

கடைசியாக செய்ஹுனா பதில் கூறுகிறார்கள்.....
எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது!
எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்!
அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!

ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?

அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை!
அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்!
காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

செய்ஹுனாதொடர்ந்து கூறுகிறார்.....இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?

அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது!
அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களதின் கருத்துகள் பரிமாறப்படும்!

இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது!

அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே,மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!

செய்ஹுனாகடைசியாக முரீதுகளைப் பார்த்து கூறுகிறார்........ அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, "உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்!"

அப்படி செய்யாமல் போனால், "ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்........!!!"
ஆம் நம் கண்மணி நாயகம் செய்ஹுனா அவர்களின் உள்ளத்தில் எவ்வறு முரீது இனைந்துவாழ்வானோ அங்கனமும் எல்லோரிடமும் இனைந்து வாழ்வதுஅவன் இறைவனோடு இனைந்து வாழ்வதாகும்